சனி, 21 மே, 2016

பாவபுண்ணிய கணக்கு

குப்புசாமி மகன் ராமசாமிக்கு
புற்றுநோய்னு ரெண்டுமாசமா
கவர்மெண்டு ஆஸ்பத்திரியில 
பாயோட பாயா சுருண்டு கெடக்கான்
உயிர்காக்கும் மருந்து வாங்க
பணமில்லாம எப்ப வேணாலும்
பரலோகம் போவானாம்
பாவி மகன்.

மகேஸ்வரி மக உமா
மூணு வயசு முடியறதுக்கு முன்னாடியே
சத்துக்கொறைவால
மூச்ச இழுத்து இழுத்து
உயிரவிட்டான்னு
ஊரே கூடிநின்னு ஒப்பாரி வைக்குது.
ரெண்டு வருஷமா
குண்டுமணி வெள்ளாம இல்லயின்னு
காவேரிகரையோரம் வாழுற
நாப்பது குடியானவனங்க
சத்தமில்லாம செத்துபோயிட்டாங்க
ஒருவரி செய்தி கூட வரலேன்னு
செத்தவனுக்குத் தெரியாது.
இந்த மக்க வாழுற
அதே மண்ணுலதான்
கேப்பாரில்லாம நாலுநாளா நிக்குது
கட்டுக்கட்டா பணத்தோட
கண்டெய்னர் லாரி மூணு
பாவபுண்ணிய கணக்கெல்லாம்
பணத்துக்குக் கிடையாது
அத வச்சிருக்கிறவனுக்குமா
எதுவுமே கிடையாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக